tamilnadu

img

ராயபுரத்தில் இலவச குடிமனை பட்டா வழங்குக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சென்னை, டிச. 7- ராயபுரம் 53ஆவது வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்  ஐட்ரீம்ஸ் மூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 53ஆவது வட்டம் பழைய வண்ணாரப் பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில், ஸ்டான்லி நகர், காத்பாடா, லேபர் லைன், சீனிவாசபுரம் குடிசை பகுதி, போஜராஜன் நகர், கீரைத் தோட்டம் ஆகிய பகுதிகளில் 5 தலைமுறைகளை கடந்து குடிமனை பட்டா இல்லாமல் மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கக் கோரி 20.12.2022இல்  மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதிகளில் கலெக்டர் நிலம், சென்னை மாநகராட்சி நிலம், தனியாருக்கு சொந்தமான நிலங்கள்  உள்ளது.

எனவே தனியார் நிலங்களை அரசு நிலங்களாக வகைப்படுத்தி தமிழ்நாடு அரசு 30.8.2019 தேதியிட்ட அரசாணை 318/19 படி பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், 52ஆவது வட்டத்திற்குட்பட்ட  மாடல் லைன் 1 முதல் 9 தெருக்கள் வரை 393 வீடுகள் சர்வே எடுக்கப்படுள்ளது என்றும், ஆஞ்சனேய நகர் 1 முதல் 6, 6ஏ ஆகிய தெருக்கள், சிதம்பரனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 350 வீடுகளும், 53ஆவது வட்டத்திற்குற்குட்பட்ட போஜராஜன் நகர், கீரைத்தோட்டம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 978 வீடுகளும் ஆய்வு செய்து சர்வே எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் இலவச குடிமனைப்பட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்  ஐட்ரீம்ஸ் மூர்த்தி (ராயபுரம்), எழிலன் (ஆயிரம்விளக்கு), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்) ஆகிய சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட பட்டா கமிட்டி அமைக்கப்பட்டுள்ள தாகவும், அந்த கமிட்டியின் மூலம் சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பட்டா இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் மே31க்குள் பட்டா வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கட், ஜி.முனுசாமி, என்.ராஜேஷ்,   போஜராஜன் நகர் கிளைச் செயலாளர் பி.குமார்,  ஆஞ்சனேய நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகி எஸ்.தேவராஜ், மாடர்ன் லைன் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், சாமுவேல், அமுதா, 53ஆவது வட்ட குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் குப்புசாமி, நாகஜோதி ஜெயலட்சுமி, கோமதி, ரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.