tamilnadu

img

தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் மீதே வழக்குத் தொடுப்பதா? - முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்!

கோட்டையூரில் தலித் மக்கள் மீது இதர சாதியினர் நடத்திய கொலைவெறித்தாக்கு முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு;

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பஞ்சாயத்து, கோட்டையூர் கிராமத்தில் 70 தலித் குடும்பங்களும், 250க்கும் மேற்பட்ட இதர சாதியைச் சேர்ந்த குடும்பங்களும் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் தலித் மக்களுக்கு பெரும்பான்மையாக வசிக்கும் இதர சாதியினர் பல்வேறு இன்னல்களையும், தீண்டாமைக் கொடுமைகளையும் கடைபிடித்து வருகின்றனர், குறிப்பாக, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை, ஓட்டல்களில் தலித் மக்கள் உள்ளே சென்று சாப்பிட முடியாத நிலை, அங்குள்ள ராமர் கோயில் உள்ளே சென்று வழிபட முடியாத நிலை, பொது நிகழ்வுகள், நிகழ்ச்சிகளில் தலித் மக்களிடம் பணம் வசூல் செய்யாதது, குடும்ப விஷேசங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க முடியாதது உள்ளிட்டு தலித் மக்கள் மீது இதர சாதியினர் நீண்ட காலமாக தீண்டாமைக் கொடுமைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்த போதும் இக்கொடுமைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை

இந்நிலையில் இம்மாதம் 12.04.2023 மற்றும் 13.04.2023 ஆகிய தேதிகளில் கோட்டையூர் அருகே ஜீன்மாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு தலித் மக்களும் சென்றுள்ளனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த மரிலிங்கா என்பவர் தலையில் தொப்பி அணிந்து சென்றுள்ளார். அப்போது இதர சாதி வகுப்பைச் சார்ந்த அருண், மோகன் ஆகியோர் மரிலிங்காவை வழிமறித்து கேலி செய்து தொப்பியை எடுத்துள்ளனர். எதற்கு தொப்பியை எடுக்கிறீர்கள் என்ற கேட்ட மரிலிங்காவை அவர்கள் பிளேடால் கையை அறுத்துள்ளனர். அன்று இரவு இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றவர்களை சகித்துக் கொள்ள முடியாத இதர சாதியினர் ஒன்று திரண்டு தலித் மக்களை அரிவாள், கம்பு, கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் 1. மரலிங்கா, 2. ரவி, 3. மது, 4. பசம்மா, 5. அபி, 6. கங்காதரன், 7. சிவா, 8. சிவம்மா, 9. விஜயா ஆகியோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வளவு பிரச்சனைகளும் அஞ்செட்டி காவல்துறை ஆய்வாளர் முன்பே நடைபெற்றுள்ளது. முன்கூட்டியே தகவல் தெரிந்தும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், கடுமையாகத் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தலித் மக்கள் ஆறு பேர் மீது 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதானது தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கோட்டையூர் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், அவ்வூரில் இதர சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், இதர சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் அஞ்செட்டி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.