சென்னை, நவ.26- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விதமாக, 4 நாட்கள் பயணமாக புதன்கிழமை தமிழகம் வருகிறார். அவர் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் வரும் அவர், ஊட்டி ராஜ்பவனில் தங்குகிறார். வியாழனன்று ஊட்டியில் இருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்குச் சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். 29 ஆம் தேதி ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர், 30 ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் குடியரசுத் தலைவர், அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, குன்னூர் ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.