tamilnadu

சமூக ஊடகங்களில் ஆபாசப் பேச்சு: பப்ஜி மதன் கைது....

சென்னை:
சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் இரு யூ-டியூப் சேனல் களை ஆரம்பித்துள்ளார். இந்த யூ-டியூப் சேனல்கள் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவரது யூ-டியூப் சேனல்களை சுமார் 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.இந்நிலையில் மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசும் வீடியோ, ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து வடபழனியைச் சேர்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.

சைபர் குற்றப்பிரிவு மதன் மீது ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மதனை, கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வந்தனர். அதேவேளையில் மதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில் இரு சேனல்களுக்கும் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் தலைமறைவாக இருந்த கிருத்திகாவை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.இதற்கிடையே, மதன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளிக் கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேவேளையில் சென்னை பெருநகரகாவல்துறையின் ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தகவலின் அடிப்படையில், தருமபுரியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமையன்று கைது செய்தனர். அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா” ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மதனை காவல்துறையினர், சென்னைக்கு அழைத்து வந்தனர்.மேலும், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்குகளை ஒன்றிய குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது.

மதனுக்கு முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த  முன்ஜாமீன் மனு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தருமபுரியில் மதன் கைது செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து மதன் கைது செய்யப்பட்டுள்ளதால், மதன் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விருப்பமில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என முன்ஜாமீன் வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

;