கிருஷ்ணகிரி, மே 12-தமிழ் நாடு அறிவியல் இயக்கமும், ஓசூர் குடியிருப்போர் நல ச் சங்க கூட்டமைப்பும், இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டார வளர்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது.ஓசூர் புத்தகத் திருவிழா தலைவர் ஆர். துரை தலைமை தாங்கினார். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஜூலை 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 8 வது ஓசூர் புத்தகத் திருவிழா குறித்து விளக்கினார்.ஓசூர் வட்டம் முழுவதும் வர இருக்கும் 8 வது புத்தக திருவிழாவில் ஏழாயிரம் மாணவர் களுக்கு இலவசமாக புத்தகங்கள் கொடுப்பது, அஞ்சல் துறைகுறித்து தெரிந்து கொள்ளவும் கடிதம் எழுதும் இனிய அனுபவத்தை கற்றுக் கொடுக்கவும் இரண்டாயிரம் மாணவர்கள் கடிதம் எழுதுதல், நூறு வீடுகளில் தலா இரண்டா யிரம் மதிப்பில் நூலகம் அமைத்தல், ஆகிய புதியஇலக்குகளும் நிறைவேற்றப்படும் அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.புத்தகத் திருவிழா செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் சீனிவாசலு, சத்யமூர்த்தி, இணைச் செயலாளர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர் சுசீலா போக்சோ சட்டம் குறித்தும், சமூகமும், பெற்றோர்களும் குழைந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும், விளக்கினார். இது சமூகத்தின் குற்றம் என்பதால் சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், பள்ளிக்கூடங்களில் இது பற்றிய விழிப்புணர்வு கல்வி அவசியம் என்பதையும் விளக்கினார்.இதில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பயிற்சியாளர் பவானி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, அறிவியல் இயக்க நிர்வாகிகள், சமூகஆர்வலர் முருகேச பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓசூர் புத்தகத் திருவிழா பொருளாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.