tamilnadu

img

ஆளுநர் ரவி பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி பால பிரஜாபதி கண்டனம்

சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர் என்ற ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் ஆளுநர் நூலை வெளியிட்டு பேசுகையில், சனாதனத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர்,கிருஷ்ணா,வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி பெரிதும் வளப்படுத்தினார் என்றும், சனாதன தர்மத்தை அழிக்க சதி செய்தவர்களிடம் இருந்து சனாதனத்தை பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் ஆழமான பங்களிப்பை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இந்து மதத்தில் நிலவும் சாதிய கொடுமைகளுக்கு எதிராகவே அய்யா வைகுண்டர் வெகுண்டெழுந்து போராடிய நிலையில், சனாதன தர்மத்தை பாதுகாக்க அய்யா வைகுண்டர் பங்களிப்பு செய்ததாக ஆளுநர் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.ஆளுநர் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அய்யா வைகுண்டர் தலைமைப் பதி பால பிரஜாபதி அடிகளார் ஆளுநர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாலபிரஜாபதி அடிகளார் அளித்த பேட்டியில், அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் மனு தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். மனு தர்மத்தை ஏற்றிருந்த அரசுதான் அய்யாவை கொடுமைப்படுத்தியது, சிறைப்படுத்தியது. உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண்-பெண் பேதம், சாதி பேதம் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் குறித்த வரலாற்றை ஆளுநர் புரிந்து பேச வேண்டும்.யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக நான்கு மாவட்டங்களில் அய்யா வழி மக்கள் இருக்கிறார்கள்.அய்யா வைகுண்டரை பெருமைப்படுத்தினால் மகிழ்ச்சியாக வரவேற்போம்.ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு தங்களுடைய சுய லாபத்துக்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது.எங்களுக்கு கால்டுவெல்,ஜி.யு.போப் போன்றவர்களின் வரலாறு தெரியும், தமிழுக்கு யார் பாடுபட்டார்கள் என்பதும் தெரியும்.தமிழ் மொழியால் வழிபட முடியாதது வழிபாடே இல்லை என்று வைகுண்டர் சொன்னார். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வேலையா? ஆளுநர் அவரது வேலையைப் பார்த்தால் மட்டும் போதும்.ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றார்.