கூடுதல் கல்விகட்டணம் வசூல்: பெற்றோர் சாலை மறியல்
திருவண்ணாமலை,ஜுன்14- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில், ஆர்டியில் பயிலும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணத்தை பள்ளிநிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து கேட்ட பெற்றோருக்கு முறையான பதில் அளிக்காத நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் பள்ளி எதிரில் குப்பநத்தம் - செங்கம் சாலையில் மறியல்செய்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறை யினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குவைத் தீ விபத்தில் முட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பலி
கடலூர், ஜுன் 14- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் பணியாற்றி வரும் சின்னதுரை, தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலையை விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர் பணிபுரிந்த ஆயில் நிறுவனத்தில் இருந்து மீண்டும் அவரை வேலைக்கு அழைத்துள்ளனர். இதனால் மறுப்பு தெரிவிக்க முடியாமல் சின்னதுரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்று, ஏற்கெனவே பணிபுரிந்த ஆயில் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்னும் 2 வாரங்களில் சொந்த ஊருக்கு வர உள்ளதாக சின்னதுரை, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் சின்னத்துரை புதன்கிழமை நடந்த தீ விபத்தில் சிக்கி பலியான உருக்கமான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தி னர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் குவைத்தில் நடந்த தீ விபத்தில் சின்னத்துரை உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அவரது உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
கள்ளக்குறிச்சி,ஜூன்14 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். புதனன்று இவரது பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் சிறுமி தனியாக இருந்துள்ளார்.இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆசிக் (24) என்ற இளைஞர் அத்துமீறி வீட்டுக்குள்சென்று தனியாக இருந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் உளுந்தூர் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் இளைஞரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.