திருவண்ணாமலை, ஜுன் 10- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குப்பநத்தம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாறு ஆற்றின் குறுக்கே குப்பநத்தம் அணை உள்ளது. இந்த நீர்தேக்கத்திற்கு 225.96 சதுர கிலோ மீட்டர் நீர் வடிவு பரப்பு உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 59.4 அடி, அணையின் முழு கொள்ளளவு 700 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அணையின் நீரின் உயரம் 25 அடியாக உள்ளது. அணையில் தேக்கப்படும் நீர் நேரடியாக செய்யாற்றில் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 5 அணைக்கட்டுகள் வாயிலாக மொத்தம் 47 ஏரிகளின் மூலம் 9,810 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அணையின் மூலம் செங்கம் தண்டராம்பட்டு கீழ்பெண்ணாத்தூர் கலசபாக்கம் மற்றும் போளூர் வட்டங்களை சேர்ந்த 40 கிராமங்கள் பயனடைகின்றன.
குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து செங்கம் மற்றும் தோக்கவாடி ஏரி பாசனத்திற்கும், 32 கிலோமீட்டரில் உள்ள இறையூர் அணைக்கட்டு வரை குடிநீர் ஆதாரங்களுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டவும், கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது நீர்த்தேக்கத்தில் அணை பராமரிப்பிற்காக 25 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதை தற்போது பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், குப்பநத்தம், கொட்டாவூர், தீத்தாண்டப்பட்டு, வலையாம்பட்டு, செங்கம் போன்ற 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை அருகே உள்ள கிராம பொதுமக்களின் நலன்கருதி 10 நாட்களுக்கு 10 கன அடி தண்ணீரை, குடிநீருக்காக திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.