நகை கடை கொள்ளை: மேலும் இளைஞர் ஒருவர் கைது
ஆவடி, ஜூன் 20- ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33) இவர் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி பிரகாஷ் கடையில் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த போது, அங்கு காரில் திடீரென்று வந்து இறங்கிய 4 நபர்கள் கடைக்குள் புகுந்து, துப்பாக்கி காட்டி பிரகாஷை மிரட்டி கைகளை கட்டி போட்டு, கடையின் லாக்கரில் இருந்து சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். புகார் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் மாநிலம், ஹரிபுரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26), அதே பகுதி, தூங்கார்வா கிராமத்தைச் சேர்ந்த
ஷெத்தனராம் (25), சாங்கோர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் (25), சுரேஷ்(27), பஜன்லால் (26) ஆகிய 5 இளைஞர்களை ஏற்கெனவே கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போராராம்(49) என்பவர் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 30 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
சென்னை, ஜூன் 20- நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்து, சென்னையைச் சேர்ந்த ரௌடிகளிடம் காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஒரு ரவுடி கும்பல், பெரியபாளையத்தில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாளுடன் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 3 நாட்டு வெடிகுண்டுகள்,4 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் (39),பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் இருவரிடமும் என்ன சதித் திட்டத்துக்கு ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி நிறைவு
சென்னை, ஜூன் 20 - சென்னை பெரம்பூர் ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில், வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் முடி வடைந்து, இறுதி கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் அதிவேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல் அருகருகே இருக்கும் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வந்தே மெட்ரோ ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பயணிகள் நின்று செல்லும் வகையில் அதிக இடத்தைக் கொண்டிருக்கும்.
மேலும் இந்த ரயில்கள் அதிக நிறுத்தங்களில் நிறுத்தப்படும். குறுகிய தூரத்துக்கு வேகமாக செல்லும் வகையிலும் இருக்கும். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலையில், வந்தே பாரத் ரயிலுக்கான அதே, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி முடிந்துள்ளது.
தற்போது அதன் இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐசிஎப் வளாகத்தில் உள்ள ரயில் பாதையில் இயக்கி இறுதிக்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து ரயிலை வேகமாக இயக்கி சோதனை நடத்தப்படும். அடுத்த ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.