சென்னை:
சென்னை மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, கொரோனா தொற்று காரணமாக நவம்பர் 30ஆம் தேதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.