tamilnadu

கோவில்களில் இரவு காவலர்கள் கோரி மனு

சென்னை, மே 8-தமிழக கோவில்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பி, உரிய ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், தேனி மாவட்டத்திலுள்ள கோவில்களில் தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.அண்மையில் தேனி ராயப்பன்பட்டியில் உள்ள பூதநாராயணர் கோவிலில், கொள்ளையர்கள் முதியவர் மலையன் என்பவரைக் கொன்றதாகத் தெரிவித்த அவர், கொள்ளைகளைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே கோவில் சொத்துக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, தமிழக கோவில்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பி, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது.