இன்று மருந்து கடைகள் மூடல்
சாத்தான் குளத்தில் வணிகர்கள் இரண்டுபேரை காவல்துறையினர் சித்தரவதை செய்து அடித்து கொன்றதை கண்டித்து வணிகர்கள் வெள்ளியன்று (ஜூன் 26) முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளிட்டு சென்னையில் சிகிச்சை பலனின்றி 29 பேர் உயிரிழந்தனர்.
12 மண்டலங்களில் 1000க்கு மேல்
சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்து 837 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் 500...
புதுவையில் வியாழனன்று (ஜூன் 25) 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520ஆக உயர்ந்துள்ளது.
கொள்ளை...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியிலுள்ள அரசு மதுபானக் கடையை உடைத்து 1 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள 750 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து அஞ்செட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபராதம்...
புதுச்சேரியில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை தவிர, தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும், முகக் கவசம் அணியாதவர்க ளுக்கும், இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்வோருக்கும் காவல் துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
5,000 படுக்கைகள்...
புதுவையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5000 படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு தொற்று...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்கள் உட்பட 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீல்...
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் உத்தரவை மீறி திருவாமாத்தூர் சீனிவாசா திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அந்த மண்டபத்திற்கு விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சீல் வைத்தனர்.