சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி புதனன்று (ஜூன் 19) திரும்பப் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்ட மைப்புப் பணிகளை, அமைச்சர் வேலுமணி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதையடுத்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.ஊழல் குற்றச்சாட்டைக் குறிப்பிட்டும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராகவும், திமுக தலைவர் மு .க ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஸ்டாலின் இவ்வாறு பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் நீதிமன்றத்தில் ஜூன் 6ஆம் தேதி வலியுறுத்தப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி வழக்கு மீண்டும் புதனன்று நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் வேலுமணி தரப்பில் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை முறைகேடுகள் குறித்து பேசத்தடைவிதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.