tamilnadu

img

மீனு, டீனு, சோனு

கந்தபாளையம் என்ற ஊரில் ரயில் பாலத்திற்கு அடியில் வண்டி பாதையும், ஓடையில் சேர்வதற்கான வழியும் உள்ளது. அங்கிருந்து ஒரு சத்தம் “வண்டி வருது, வண்டி வருது ஓடிப்போயி ஒளிங்க ஒளிங்க. சோனு தாத்தா சீக்கிரமாக கையை குடுங்க இந்த பக்கம் வாங்க”னு வண்டிகிட்ட இருந்து மீனு காப்பாத்திட்டாள்.  டீனு “ஐயோ இன்னும் எவ்வளவு நாள் தான் இதே மாதிரி நாம்ப கஷ்டப்படுவோம் என்று தெரியவில்லை. நம்பளை காப்பாற்ற யாருமே வர மாட்டாங்களா? எல்லாருகிட்டையும் காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சொல்லிட்டு தான் இருக்கிறோம். ஆனா யாருக்கும் நாம்ப சொல்லுறது கேட்கிறதே இல்லையே”. உடனே சோனு தாத்தா “கவலைப்படாதடா நாம்ப முயற்சி பண்ணிகிட்டே இருந்தா கண்டிப்பா ஒரு நாள் நமக்கு வெற்றி கிடைக்கும் டா”.  “அட போங்க தாத்தா. இன்னும் ரெண்டு நாள் போச்சுன்னா நாம்ப தண்ணி இல்லாம எல்லாரும் இறந்தே போயிருவோம்‌. இதுல வண்டில வந்து வந்து, இருக்கிற கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் காலி பண்ணிருவாங்க போல” என்றது டீனு.  மீனு, “இந்த மாதிரி நேரத்தில் தான் நாம்ப முயற்சியை கைவிடாம நம்பிக்கையோடு இருக்கணும்”. டீனு “அச்சச்சோ மறுபடியும் வண்டி வருது, வண்டி வருது ஓடிப்போய் ஒளிங்க”. மறுபடியும் டீனு, மீனு, சோனு தாத்தா எல்லாரும் ஒளிஞ்சுகிட்டாங்க. அந்த வழியாக ஒரு குட்டி பையன் கையில் பொம்மையை வைத்து கொண்டு நடந்து போறான். அவனைப் பார்த்ததும் , மீனு , டீனு, சோனு தாத்தா காப்பாத்துங்க காப்பாத்துங்க சத்தம் போடுறாங்க. ஆனா அந்த குட்டி பையனுக்கு சத்தம் கேட்கவே இல்லை. அந்த குட்டி பையன் கையிலிருந்த பொம்மை கரைட்டா மீனு, டீனு, சோனு தாத்தா இருந்த இடத்தில் விழுந்துவிட்டது.  சோனு தாத்தா, “டேய் கண்ணுங்களா. இதுதான் நமக்கு சரியான நேரம். அந்த குட்டி பையன் பொம்மையை எடுக்க நம்ம கிட்ட வந்துட்டான். இப்போ சொல்லுங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க” காப்பாத்துங்கனு சத்தத்தை கேட்ட அந்த குட்டி பையன். யாரு காப்பாத்துங்கனு சத்தம் போடுறாங்கனு, அந்த தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் பார்த்தால் மூன்று மீன்கள். சோனு தாத்தா மீன், “குட்டி பையா. எங்களை இங்கிருந்து காப்பாத்து பா”. குட்டி பையன், “ஐய்ய் மீன்கள். நீங்க எப்படி இங்க வந்தீங்க. உங்க பெயர் என்ன?” “என் பெயர் டீனு, இது சோனு தாத்தா, இது மீனு. தங்க குட்டி பையா, முதலில் இந்த இடத்தில் இருந்து வேற‌ நல்ல தண்ணீர் இருக்கிற இடத்திற்கு மாற்று பா” என்றது மீனு. “சரி, சரி கவலைப்படாதிங்க” என்று கூறி விட்டு. குட்டி பையன் மீனு, டீனு, சோனு தாத்தா வை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல தண்ணீரும் கவரும் எடுத்துக் கொண்டு வந்தான். சோனு தாத்தா, மீனு, டீனு எல்லாரையும் கவரில் எடுத்து விட்டான். மூன்று மீன்களும் ஆஹா நல்ல தண்ணீர் இப்போதான் நல்லா மூச்சு விடமுடிகிறது என்றார்கள்.  குட்டி பையன், நீங்க எப்படி இங்க வந்தீங்கனு கேட்கிறான். அதுக்கு மீனு, “நாங்கள் லட்ச கணக்கில் தண்ணீர் இருந்த ஒரு பெரிய அணையில் தான் எங்க குடும்பத்தோடு சந்தோஷமா இருந்தோம். ஒரு நாள் திடீர்னு அணை நீர்மட்டம் உயர்ந்தது. அப்போ அணையின் கதவு திறக்கப்பட்டது.  எங்க குடும்பத்துல இருந்த எல்லாரும் திறக்கப்பட்ட கதவு வழியா ஒரு பெரிய வாய்க்காலில் வந்து விழுந்தோம்.  அங்கிருந்து தண்ணீரோட வேகத்தை பொருத்து வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றோம்.  ரொம்ப தூர பயணத்திற்கு பிறகு பெரிய வாய்க்காலில் இருந்து கன்னி வாய்க்காலுக்கு அடித்து செல்லப்பட்டோம். பெரிய வாய்க்கால் வழியாக வரும் போது ஊர்களுக்கு தனித்தனியாக கன்னி வாய்க்கால்கள் பிரிந்தன.  நாங்கள் தண்ணீரின் வேகத்தால் இந்த ஊர்க்கு வரும் கன்னி வாய்க்காலில் அடித்து வரப்பட்டோம். கன்னி வாய்க்கால் பல கிளை பிரிவுகளாக பிரிந்தது. அதனை கொப்பு வாய்க்கால் என்பர். கொப்பு வாய்க்கால் வழியாக வரும் போது தண்ணீரின் வேகம் குறைந்தது.  கொப்பு வாய்க்காலில் இருந்த நண்டு நண்பர் ஒருவர் இந்த பாதையில் சென்றால் ஓடையில் போயி சேரலாம் என்றும், தண்ணீர் வரத்து குறைவதற்குள் சென்று விடுங்கள். இல்லை என்றால் இவ்வழியே வண்டிகள் வரும் என்றார். அதனால் நாங்கள் வழியில் வந்தோம். ஓடையில் சேர்வதற்குள் தண்ணீர் நின்றதால், இந்த சிறிய தேக்கத்தில் மாட்டிக் கொண்டோம்” என்று மீனு கூறியது. “ஓ..... இவ்வளவு தூரத்தில் இருந்தா வந்திங்க. இப்போ உங்களை எங்க கொண்டு போயி விடுகிறது?”என்று கேட்டான் குட்டி பையன். சோனு தாத்தா மீன், “எனக்கு வயதாகிவிட்டது. அதனால் ஓடை போன்ற கரடுமுரடான கல் பாறை நிறைந்த பாதையில் நீந்தி செல்ல இயலாது. என்னை கிணற்றில் விட்டுவிடுங்கள்”. குட்டி பையன் சரி சோனு தாத்தா உங்களை எங்கள் ஊர் கிணற்றில் விட்டுவிடுகிறேன். அங்கே தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றான். டீனுவும், மீனுவும் “எங்களை ஓடையில் விட்டு விட்டுங்கள். அப்போதுதான் ஓடை வழியாக ஆற்றில் கலந்து கடலுக்கு செல்ல முடியும். நிறைய புதிய நண்பர்கள் மற்றும் புதிய சூழலில் வாழ முடியும்”. குட்டி பையன், சரி மீனு, டீனு உங்களை ஓடையில் விட்டு விடுகிறோன். சோனு தாத்தா, “குட்டி பையா, எங்களை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. மீனு, டீனு இரண்டு பேரும் பத்திரமாக போங்க, எப்போதும் ஒற்றுமையாக இருக்கனும். நான் போயிட்டு வரேன்”. மீனு, டீனு டாடா டாடா சொல்ல, சோனு தாத்தா கிணற்றில் குதித்தார். குட்டி பையன், இதோ ஓடை வந்துருச்சு. மீனுவும் டீனுவும் குட்டி பையனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடையில் குதித்தார்கள். தங்கள் புதிய பயணத்தை தொடங்கினார்கள்.

குறிப்பு: 
பெரிய வாய்க்கால் - அணையில் இருந்து திறக்கப்படும் நீர். வயல் பாசனத்திற்காக பெரிய வாய்க்கால் வழியாக அனைத்து ஊர்களுக்கும் செல்லும். கன்னி வாய்க்கால்- பெரிய வாய்க்காலில் இருந்து தண்ணீர். ஒவ்வொரு ஊர்களுக்கு தனி தனி கிளைகளாக பிரிவதை கன்னி வாய்க்கால் என்பர். கொப்பு வாய்க்கால் - கன்னி வாய்க்காலில் இருந்து வயல்களுக்கு செல்ல தனி தனி கிளைகளாக பிரிவதை கொப்பு வாய்க்கால் என்பர்.