சென்னை, ஆக. 14 - உத்தப்புரம் கிராமத்தில் நிலவும் தீண்டாமை வடிவங்களை ஆழமாக ஆய்வு செய்யாத அரசு நிர்வாகத்தின் மேம்போக்கான அணுகுமுறையை ஏற்க முடியாது என்றும், அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தீர்வு காணாத சமாதானக் கூட்டம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் பிரச்சனையில் ‘சமாதானக் கூட்டம்’ என்ற பெயரால் அரசு நிர்வாகம் நடத்திய கூட்டம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமையவில்லை.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தப்புரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தை வழிபட்டு மாரியம்மன் பங்குனி திருவிழாவை 7 நாட்கள் நடத்துவது வழக்கம்.
பாதியில் நிறுத்தப்பட்ட திருவிழா
இந்நிலையில் 2014 அக்டோபர் 23 அன்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவின் போது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் முத்தாலம்ம னை வணங்கி விட்டு பின்பு அரசமரத்தை வழிபட்டு மாலை அணிவித்தனர். இதனை பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் எதிர்த்தனர். இதனால் திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டு உசிலம்பட்டி கோட்டாட்சியர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பேரையூர் வட்டாட்சியர் ஆகியோர் கோவிலைப் பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்பு கோவில் திறக்கப்படாமல் இருந்தது.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு
இந்நிலையில் கோவிலைத் திறக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜி. பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கோவி லைத் திறந்து பூசைகள் நடத்தப்பட வேண்டும், ஏற்கெனவே ஊர் மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தீண்டாமைகளுக்கு முடிவு கட்டி இருப்பதால் இரு தரப்பினரும் சேர்ந்து வழிபடலாம், அதில் பிரச்சனை கள் ஏற்பட்டால், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு என்ற வகையில் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சில வழிபாட்டு முறைகளை வலியுறுத்தியதால் பிரச்சனை எழுந்தது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
தீண்டாமை அறவே இல்லையா?
சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி வாழ்க்கையின் நிகழ்வு ஒன்றையும் தீர்ப்பில் பதிவு செய்து எல்லா தெய்வங்களையும் ஒன்றாக நடத்து வதும் தவறு; ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு வகை வழிபாடு இருக்கும் என்ற கருத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த வழக்கில் பட்டியல் சாதி மக்கள் தரப்பில் யாரும் இணைத்துக் கொள்ளாத நிலையில்- ‘உத்தப்புரத்தில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதால் தீண்டாமைகள் அறவே இல்லை’ என்ற முடிவுக்கு நீதிபதி எப்படி வந்தார்? என்பது கேள்விக்குறியே. இது தவிர வழிபாட்டு முறைமைகள் குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்களும் விவாதத்திற்குரியவை.
நீதிமன்ற உத்தரவை அடுத்து 12.8.2024 அன்று உசிலம்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பின் பிரதிநிதிகளையும் அழைத்து ‘சமாதானக் கூட்டம்’ நடைபெற்றது.
பிரச்சனைகளை பேசாத கோட்டாட்சியர்
அந்தக் கூட்டத்தில் உத்தப்புரத்தில் நிலவும் நிலைமைகள் பற்றி விவாதிக்காமல், தலித் மக்கள் காலங்காலமாக வழிபட்டு வந்துள்ள உரிமைகளை பாதுகாப்பது பற்றிய எந்த ஒரு உறுதிமொழியும் இல்லாமல் அந்தக் கூட்டத்தை அவசர கதியாகவும் இயந்திர கதியாகவும் நடத்தி முடிக்க முனைந்தனர். ‘நீதிபதி சந்துரு அவர்களின் தீர்ப்பு’, ‘ஒப்பந்தத்தின் சாரம்’ இவை பற்றியெல்லாம் பேச மறுத்த கோட்டாட்சியர், ‘கோவிலை உடனடியாக திறக்க வேண்டும்’ என்றும் ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கோவிலை திறக்கும் போது அனைவரும் வழிபட லாம்’ என்று பொதுவாகத் தெரிவித்தாரே தவிர, குறிப்பான பிரச்சனைகளை விவாதிக்க தயாராக இல்லை.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்- ஏற்கெனவே அன்றைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் போட்ட ஒப்பந்தத்தின்படியும் நீதியரசர் சந்துரு அவர்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தங்களின் அரசமர வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தேவேந்திர மக்கள் வெளிநடப்பு
கோட்டாட்சியரின் இயந்திர கதியான அணுகு முறை காரணமாக தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரதிநிதிகள் கோட்டாட்சியரிடம் எழுத்துப் பூர்வமாக தங்கள் நிலையை தெரிவித்து கடிதம் அளித்தனர். எந்தெந்த நாட்களில் எந்தெந்த நேரத்தில் கோவில் திறக்கப்படும், நடை சாத்தப்படும் என்ற முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும், வழி பாட்டின் போது பட்டியல் சமூகம் மக்களுக்கு பாது காப்பை உறுதி செய்திட வேண்டும், அரசமர வழி பாட்டு உரிமையை உறுதி செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கோட்டா ட்சியரிடம் கொடுத்துவிட்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உணர்வுகளை கேட்டறிந்த சிபிஎம் -தீஒமு!
உத்தப்புரம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உ. நிர்மலாராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி. செல்லக்கண்ணு, மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செ. முத்து ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பி. முருகன், சேடப்பட்டி ஒன்றிய குழுவின் செயலாளர் பி. காசிமாயன், ஒன்றி யக் குழு உறுப்பினர் என். ஜெயபால் ஆகியோர் பங்கேற்று தேவேந்திர குல வேளாளர் மக்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் கேட்டு அறிந்தனர். எனவே, உத்தப்புரம் கிராமத்தில் நிலவும் தீண்டாமை வடிவங்களை ஆழமாக ஆய்வு செய்யா மல், கருத்தில் கொள்ளாமல் அரசு நிர்வாகம் அணுக முனைவதை ஏற்க இயலாது என்றும், அரசியல் சாசன உரிமை என்ற வகையில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும், அரசு நிர்வாகம் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.