tamilnadu

படுமோசமான நிலையில் கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலை

ராயபுரம்,டிச.5- கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இதைச் சுற்றி எழில் நகர், எம்.ஜி.ஆர்.நகர், கார்நேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திர சேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன.

இங்கு ரயில் போக்குவரத்து க்காக தினமும் 20 முறைக்கு மேல் ரயில்வேகேட் மூடப்படுவது வழக்கம். அப்போது வாகனத்தில் செல்பவர்கள் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்து சென்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமம் இன்றி ரயில்வே தண்ட வாளத்தை கடந்து செல்ல எழில் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2023ம் தொடங்கப்பட்டு தொடர்ந்து பணி கள் நடைபெற்று வருகிறது. மேம்பாலப்பணி நடந்து வரும் நிலையில் அதன் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளன.

சமீபத்தில் பெய்த மழை யால் சாலை முழுவதும் பல்லாங்குழி போல் காட்சி அளிக்கின்றன. மழை பெய்யும் போது இந்த சாலை படுமோசமாக மாறி விடுகிறது. இதனால் சர்வீஸ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தினந்தோறும் வாகன ஓட்டிகள் அவ்வழியே சாகச பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கொருக்குப்பேட்டை சர்வீஸ் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளங்கள் எங்கு உள்ளது என்பது தெரியாமல் திணறியபடி  செல்வதால் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர்.