சென்னை, மே 7-தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசுக்கு, பேரவைத் தலைவரிடம் விளக்கம் அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரி, சட்டப்பேரவை செயலரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனு அளித்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல் வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக் கொறடா ராஜேந்திரன்,பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் கடந்த 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.இதை எதிர்த்து ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான பேரவைத் தலைவரின் நடவடிக் கைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட்டனர். அதேசமயம், விளக்கம் அளிப்பதற்குப் பேரவைத் தலைவர் அளித்த கால அவகாசம் மே 7 ஆம் தேதியோடு முடிந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி கள்ளக்குறிச்சி பிரபு, சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் மனு அளித்துள்ளார். எம்எல்ஏ பிரபு சார்பில் அவரது வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த தடை தனக்கும் பொருந்தும் என நம்புவதாகவும், ஒருவேளை அந்த தடை தனக்குப் பொருந்தா விட்டால் பேரவைத் தலைவரிடம் விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும், பிரபு கூறியுள்ளார். அப்படி விளக்கம் அளிப்பதற்கு மேலும் ஒரு வாரக் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் பொருந்தும் என்றும், அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சட்டப்பேரவை செயலகம் கூறியுள்ளது.