சென்னை:
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், திரைப்பட இயக்குநர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் கவுதம் மேனன் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் வாழ்க்கையை “தலைவி” என்ற பெயரில் தமிழிலும், “ஜெயா” என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இதேபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸ் தொடராக தயாரிக்க இருப்பதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் அறிவித்துள்ளார். இதற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக தீபா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, மனு தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் மேனன் உள்ளிடோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.