tamilnadu

img

சமூக நீதிக்கான சமர்க்களத்தில்... “அது பொய் வெறும் வதந்தி அவங்களும் அமைதியத்தான் விரும்புறாங்க” ஒற்றுமைப் பிரச்சாரத்தின் வெற்றி

1995-96 ஆம் ஆண்டுகள் ! தமிழகத்தின் பல தென் மாவட்டங்களிலும் பதட்டமும் கலவரச் சூழலும் அதிகரித்து வந்தன. ஆம்! சாதிய மோதல்கள் கொழுந்துவிட்டு எரிந்த காலம் அது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவ கங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட் டங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல நூறு கிராமங்களுக்கு சிபிஐ(எம்) சார்பாக நாங்கள் நேரிடையாக சென்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மட்டு மல்ல, நம்பிக்கையும் அளித்து சில உடனடி நிவாரணங்கள், உதவிகளையும் வழங்கினோம். நம்மை பொறுத்தவரை மக்கள் ஒற்றுமை யிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையிலும் ஆர்வமும், நம்பிக்கையும் உடையவர்கள். எனவே, வேறு எந்த பிரிவினரையும் விட சாதிய மோதல்கள் குறித்து நமது கவலை ஆழமான தாக இருந்தது. பதட்டத்தை தனித்து ஒற்று மையை நிலைநாட்ட மிகுந்த ஆதங்கத்துடன் செயல்பட்டோம். இந்த மோதல்கள் தாமே உருவானதல்ல. சாதிய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களுக் கும், தலித் மக்களுக்கும் இடையே தான் இத்தகைய மோதலை சாதிய சக்திகள் உரு வாக்கின - தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக் கின்றன. இந்த இரு பிரிவினருமே சமூக ரீதி யாக மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் மிக பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். நாங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடி யாக பார்வையிட்டபோது, இரு பகுதியினரின் குடியிருப்புகளும் (பெரும்பாலும் குடிசை கள்) பொருளாதார நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தன. இரு தரப்பினரும் இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் மிக கணிச மான பிரிவினர் ஆவர். இவர்களை ஒற்றுமைப் படுத்துவது வரலாற்றுத் தேவையாகும். ஆனால் இவர்களிடையே சாதிய சக்திகளும், சாதிய உணர்வுகளும் உட்புகுந்து மேல்சாதி - கீழ்சாதி என்ற பிரிவினை ஏற்படுத்தி மோதலை உருவாக்கிவிட்டன.

இரு தரப்புக்குமே உயிர், உடைமைக்கு சேதாரம் ஏற்பட்டிருந்தபோதிலும் தலித் மக்களுக்கு கூடுதலான சேதமும், பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. இவர்களுடைக்கிடையே யான மோதலையும், பகைமையையும் முற்றாக முடிவுக்கு கொண்டு வர வேண்டு மாயின் அதற்கான அடிப்படைகள் / கார ணங்கள் அறிந்து அவற்றை போக்குவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவில் பிரச்சனை மோதலுக்கு காரண மான ஒரு கிராமத்திற்கு நாங்கள் சென்றிருந் தோம். அங்கு சாதி இந்துக்களின் பிரதிநிதிகளி டம் நாங்கள் உரையாடினோம். பதட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றுமையை நிலை நாட்டுமாறு கேட்டுக் கொண்டோம். அப்போது அக்கூட்டத்தின் முன்வரிசையில் இருந்த ஒருவர் ஆத்திரத்துடன் கூறியதாவது “இந்த மோதலுக்கு நாங்கள் காரணம் அல்ல, அவர்கள் தான் காரணம். இந்த கோவில் காலம் காலமாக நாங்கள் (சாதி இந்துக்கள்) வழிபடும் கோவிலாகும். இதற்கு முன்பு அவர்கள் (தலித்துகள்) ஒருபோதும் இக்கோவிலில் வழிபட்டது இல்லை, ஆனாலும் அவர்கள் வேண்டுமென்று இக்கோவிலில் உரிமை கேட்டு வழிபாடு நடத்த முயற்சிக்கிறார்கள், இது எந்த வகையில் நியாயம்?. எனவே, அவர்கள்தான் மோதலுக்கு காரணம்” என்றார்.

“கோவில் என்பது அனைவருக்குமான பொது வழிபாட்டுத்தலம் தானே. அம்மக்களை யும் வழிபட அனுமதித்தால் பிரச்சனை தீர்ந்து விடும் அல்லவா?” என நாங்கள் கேட்டோம். அதற்கு அவர் உரத்த குரலில் “அதெல்லாம் அனுமதிக்க முடியாது” என உறுதிபட பதி லளித்தார். கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதியாக எங்கள் விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலரும் நாங்கள் கூறிய நியாயத்தை ஏற்றுக் கொண்டி ருக்கக் கூடும். ஆயினும், சாதி வெறியுடன் சாதிய சக்திகள் (சில நபர்கள்) செயல்படு வதால் தான் நிலைமை மோசமாகி மோதல் போக்கு உருவாகிறது என நாங்கள் புரிந்து கொண்டோம். எனவே, இக்கிராமத்தில் பதட்டத்திற்கும், சாதிய மோதலுக்கும், சாதிய ஒடுக்கு முறையே (தீண்டாமை) காரணம் என்பது அறிய முடிகிறது. இக்கிராமத்தில் கோவில் வழிபாட்டு உரிமை தலித்துகளுக்கு உரிய ஒரு பிரச்சனை என்றால் இதர பல கிராமங்களில் பொது சாலைகளில் நடந்து செல்வது, பொது குளங்களில் குளிப்பது, பொது குழாயில் தண்ணீர் எடுப்பது, பொது மைதானங்களை பயன்படுத்துவது, பொது மயானத்திற்கு உரிமை கோருவது போன்றவை பிரச்சனை களாக இருக்கின்றன. இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளை (தீண்டாமைக் கொடுமை கள்) முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே - அதாவது மக்களிடையே சமூக, சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே மோதலையும், பதட்டத் தையும் முடிவுக்கு கொண்டு வர முடியும். இந்த அணுகுமுறை அடிப்படையிலேயே சிபிஐ(எம்) உள்பட இடதுசாரி இயக்கங்கள் மக்களிடையே ஒற்றுமைப் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. 

“சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிப்போம்
சாதி மோதலை தவிர்ப்போம்
மக்கள் ஒற்றுமை காப்போம்”
இது சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் முழக்கமாகும். மேலும், காலம்காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி யிருந்த தலித் மக்களிடையே சமீப காலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது - அவர்கள் மறுக் கப்பட்டிருந்த தங்களது உரிமைகளை மீட்க களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள் என் பதை புரிந்து கொள்ள வேண்டும். சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி இயக்கங்கள் இத்தகைய தலித் எழுச்சியை வரவேற்பதோடு இவற்றில் ஜனநாயக உள்ளடக்கம் இருப்பதாக வரையறுத்துள்ளன. ஆனால், இதர பல முதலாளித்துவ இயக்கங் கள் சாதிய மோதலுக்கான அடிப்படை கார ணங்களை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டே அவற்றை புறக்கணித்து 

“ சாதி மோதலை தவிர்ப்போம்
மக்கள் ஒற்றுமை காப்போம்”
என்ற முழக்கத்தை மட்டும் முன்வைக்கின்றனர். மோதலுக்கான அடிப்படை காரணங் களுக்கு தீர்வு ஏற்படுத்தாமல் சாதிய மோதலை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும்? மேலே குறிப்பிட்ட அடிப்படையில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி வர்க்க வெகுஜனஅமைப்புகள் மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்தை மேற்கொண்டன. குறிப்பாக, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் மிக விரிவான பிரச்சார இயக்கத்தை நடத்தியது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கமும் இப்பிரச்சாரத்தில் இணைந்து கொண்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பல மாவட்டங்க ளில் மக்கள் ஒற்றுமை பிரச்சாரங்களை நடத்தியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கயத்தாரிலிருந்து கோவில்பட்டி வரை நடைபயண இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பிரச்சார இயக்கங்கள் நடைபெறும்போது,

பல தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை சாதுரியமாக சமாளித்து மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்தை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். சிஐடியு தொழிலாளர்கள் மத்தியில் இப்பிரச்சனையை எடுத்துச் சென்றதோடு சாதிய மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் நிவாரண உதவிகளைச் செய்தது. இந்திய மாணவர் சங்கம் பல கல்லூரிகளில் மாணவர்களி டையே சாதி பிரச்சனைகள் உருவானபோது அவற்றில் தலையிட்டு ஒற்றுமையை உருவாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க படைப்பாளிகள் இக்காலத்தில் சாதி வேறுபாடுகள் - ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல படைப்பு களை உருவாக்கினார்கள். இந்த அமைப்பின் சார்பாக பல இடங்களில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்தரங்குகள் / கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இக்காலத்தில் சிபிஐ(எம்) சார்பாக சாதிய மோதல்கள் ஏற்பட்ட மாவட்டங்கள் பலவற்றிலும் நேரடியான தலையீடு களை செய்தது. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே மக்கள் ஒற்றுமைக்கான முயற்சி களையும், பிரச்சாரத்தையும் விரிவாக மேற்கொண்டது. கோவில்பட்டி தாலுகாவில் சிபிஐ(எம்) நடத்திய பிரச்சாரம் மற்றும் அதன் வெற்றி குறித்து நக்கீரன் பத்திரிகை யில் “கம்யூனிசம் - நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரையின் மேற்கோளை அப்படியே கீழே குறிப்பிடுகின்றோம்.

“தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரை அடுத்த கூசாலிப்பட்டி, இலுப்பையூரணி, தாமஸ் நகர், வள்ளுவர் நகர், ராயல் மில் காலனி போன்ற அடுத்தடுத்த கிராமங்களில் 1997-இல் சாதிக்கலவரங்கள் நடந்துள்ளன. உடனே மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த உத்தண்டராமன், முருகன் மற்றும் சில தோழர் கூடினார்கள். இரு சாதிகளை யும் சேர்ந்த நல்லெண்ணம் கொண்ட பிரமுகர்கள், கிராம நிர்வாக அதிகாரியையும் அழைத்துக் கொண்டார்கள். ஒரு வேனை எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது.  ஒரு கிராமத்திற்குள்  வேன் சென்றது. உடனே ஊரில் திரண்டிருந்த ஒருவர் கத்தினார். “ டேய் வேற்று சாதியான் நம்ம ஊருக்குள்ள வந்துட்டான்டா, வெட்றா அவன” என்று கத்திக் கொண்டே அரிவாளுடன் பாய்ந்தார். அப்போது வேனிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர் ஒருவர் “உன்னோட சாதியில பிறந்தவன் தான் நான், முதல்ல என்னை வெட்டு, அப்புறம் அவர வெட்டலாம்” என்று தைரியமாக நிமிர்ந்து நின்றார். வெட்ட வந்தவர் தயங்கி நின்றார். “சாதி துரோகி” என்று ஆத்திரம் மேலிட சத்தம் போட்டு திட்டினார்.  அப்போது ஒலிபெருக்கி குரல் கேட்டது. “சாதி என்னங்க சாதி, பெரியவங்களே... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நம்ம எல்லாருமே ஏழைங்குற சாதி தான். சாதி, சாதின்னு கலவரம் பண்ணி எந்த சாதிக்காரரும் வெளியே போக முடியல. குடும்பம், குடும்பமா பட்டினிக் கிடக்கு, உங்களை யெல்லாம் கெஞ்சி கேட்டுக்கிறோம். நாம எல்லாரும் உடன் பிறந்த பிறப்பா வாழுவோம். அரிவாளை கீழே போடுங்க. கூட்டத்திலிருந்து ஒரு குரல் “பக்கத்து ஊர்க்காரங்க எங்களத் தாக்க வர்றாங்களே” என்று கேட்டது.

“அது பொய், வெறும் வதந்தி, நாங்க அங்க போயிட்டு தான் இங்க வர்றோம். அவங்களும் அமைதியைத்தான் விரும்புறாங்க” என்று விளக்கம் தரப்பட்டது. அரிவாள்கள் கீழே விழுந்தன. இதேபோல அடுத்த கிராமத்தில்.... அதற்கடுத்த கிராமத்தில்..... அதற்கடுத்த கிராமத்தில் என்று உயிரைப் பணயம் வைத்து சென்ற தோழர்களின் அரிய முயற்சிகள் வெற்றிமேல் வெற்றி பெற்றன. அமைதி நிலை நாட்டப் பட்டது. இவை மட்டுமல்ல.

தங்களது உறுப்பினர்கள் யாரும்
சாதிக் சங்கங்களில் சேரவோ
சாதிய இயக்கங்களில் 
பங்கேற்கவோ தடை விதித்து
உறுதியாகச் செயல்படுத்தும்
ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் !
இதேபோல அனைத்து அரசியல் கட்சிகளும் தடை விதித்து தடையைச் செயல்படுத்தினால் சாதி கொடுமை களும், மோதல்களும் பெருமளவிற்கு குறைந்துவிடும் அல்லவா? சிந்தித்துப் பாருங்கள்” அக்காலத்தில் சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உறுதியுடன் நடத்திய மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்தின் மிக முக்கியமான அனுபவத்தையே மேலே குறிப்பிட்டுள்ளோம்.