tamilnadu

img

பா.ஜனதாவின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கிறது

சென்னை:

பாஜகவின் அத்து மீறல்களை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது, அது மக்களை ஏமாற்றி விட்டது என்று ப.சிதம்பரம் கூறினார். 


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம் பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பாஜகவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பாஜகவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பாஜக வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்.பாஜக தனது தோல்வியை மறைக்க ‘தேசிய வாதம்’ என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதிகளாகவா இருந்தார்கள்?


எல்லோரும் தேசபக்தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாகக் கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக் கொண்டு, இந்தப் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது.இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் ஐந்தாண்டு களுக்கு முன்பு இருந்தது போல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொருஇந்தியரும் அச்சத்து டனே வாழ்ந்து வருகிறார்கள்.பெண்கள், பத்திரிகை யாளர்கள், கல்வியாளர்கள் உட்பட அனைவரும் அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள்,நிலையான அரசு அமைய


காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்றுசேரும்.தேர்தல் நேரத்தில், சி.பி.ஐ., வருமான வரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப் பட்டது இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பாஜக வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?


துப்பு கிடைத்ததாகக் கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டும் துப்பு கிடைக்குமா? பாஜக வேட்பா ளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

;