சென்னை, மே 15-பாஜகவோடு கூட்டணிக்கு திமுக தலைவர் பின்வாசல் வழியாக பேச்சு நடத்தினார் என்று தமிழிசை தெரிவித்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், தோல்வியை ஒப்புக் கொண்டு, காணாமல் போன பாஜக தலைவர் சகோதரி தமிழிசை அதிமுகவின் நிர்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியிலும் திமுகவின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமலிருக்க பரபரப்புச் செய்திகளையும், கருத்துக்களையும் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன் எடுத்ததையும், அதில் திமுக தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் மீது முன் மொழிந்ததையும் அனைவரும் நன்கறிவர்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பாஜக வோடு பின்வாசல் வழியாக பேசிவருவதாக தமிழிசை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந் தெடுத்த பொய் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய “பொய் சொல்ல கூடாது பாப்பா” என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.