tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முதலம்பேடு கிளை உறுப்பினர்கள் கே.சிவா, கே.வெங்கடேசன் ஆகி யோரின் தாயார் தாட்சாயணியம்மாள் (வயது 75), சனிக் கிழமையன்று (ஜூலை 13), அதிகாலையில் காலமானார்.

அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு  உறுப்பினர் எம்.சி.சீனு, எஸ்.கோவிந்தராஜ், வசந்த் பௌத்த, பாபி உட்பட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். மேல்முதலம்பேட்டில் உள்ள மயானத்தில் தாட்சாயணி உடல் சனிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டது.

கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்எஸ்சி பாடம் அறிமுகம்

புதுச்சேரி,ஜூலை 13- ராஜீவ் காந்தி கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரி  தொழில்நுட்பத்தில் எம்.எஸ்.சி புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகம் விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் 20 மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில், புதுச்சேரி ராஜீவ் காந்தி  கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி யுள்ளது. அதன் இந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் எம் எஸ் சி பட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 

பயோடெக்னாலஜி உயிரி வேதியியல், நுண்ணுயிரி யல், விலங்கியல், விலங்கு அறிவியல் பாடங்களில் பி.எஸ்.சி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள் புதுச்சேரி ராஜீவ் காந்தி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

வருகிற 31 ஆம் தேதிக்குள் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விரைவில்  யாசகர் மறுவாழ்வு திட்டம்

புதுச்சேரி, ஜூலை 13- புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லூரி யில் யாசகர் மறுவாழ்வு திட்டம் தொடங்குவது குறித்து கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற சமூக நலத்துறை இயக்குநர் ராகினி, மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

புதுச்சேரி சமூக நலத்துறை, ஒன்றிய அரசின் சமூக நீதி துறையுடன் இணைந்து புதுச்சேரி யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை விரைவில்  தொடங்க உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டு வருகிறது. விரைவில் யாசகம் பெறுவோர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ள நிலையில் இப் பயிற்சி  முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

482 ஊர்காவல் படை வீரர்களுக்கு விரைவில் பணி ஆணை

புதுச்சேரி, ஜூலை 13- புதுச்சேரி காவல்துறையில் ஊர்க்காவல் படை பிரிவுக்கு உடல் தகுதி எழுத்து தேர்வு மூலம் 482 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு  கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தலைமையில், காவல் துறை  கண்காணிப்பாளர் ரங்கநாதன் மேற்பார்வையில் பணி கள் நடைபெற்றது. கடந்த 4 நாட்கள் நடைபெற்ற சான்றிதழ்  சரிபார்ப்பில், 471 பேர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதும் உள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்க்க முடியாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை முடித்தவர்களுக்கு ஓரிரு நாளில் பணி ஆணை வழங்கப்படுகிறது.

அயோத்தி செல்ல பயணிகள் இல்லாததால் விமான சேவை ரத்து

சென்னை, ஜூலை 13- சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு தினமும் காலை 8.35 மணிக்கு தனியார் ஸ்பைஜெட் விமானம் புறப்பட்டுச் செல்லும். 

இந்த விமானம் காலை 11.15 மணிக்கு அயோத்தியைச் சென்றடையும். அதன் பின்னர், அதே விமானம், அயோத்தியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடையும்.

இந்நிலையில், சனிக்கிழமை போதிய பயணிகள் இல்லாத தால் சென்னை- அயோத்தி, அயோத்தி - சென்னை ஆகிய  2 விமானங்கள்,  ரத்து செய்யப்பட்டன. விமானத்தில் பயணம் செய்ய ஒரு சில பயணிகள் மட்டுமே டிக்கெட்  முன்பதிவு செய்திருந்ததால், அவர்களின் டிக்கெட்டுகள, அவர்கள் விரும்புகின்ற தேதிக்கு மாற்றிக கொடுக்கப்படும். இல்லையென்றால், பயணிகளுக்கு பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டுவேலை சங்க கிளை உதயம்

சென்னை, ஜூலை 13 - வீட்டுவேலை சங்கத்தின் துறைமுகம் பகுதி, பிஆர்என் கார்டன் கிளை அமைப்பு கூட்டம் வெள்ளியன்று (ஜூலை 12) செங்கேனி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பி.சுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை தலைவராக ராணி, செயலாளராக சரஸ்வதி, பொருளாளராக சொட்லீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.