tamilnadu

img

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

 சென்னை, ஜூன் 27 - ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம்  அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழ மை (ஜூன் 27) கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டை நோக்கி  பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, மோட்டர் வாகனம், தோல் பொருட்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.

ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரியில் ஒட்டுமொத்த சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும்  வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.  மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சி யில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும். கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும்.  

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்று அமைச்சர்கள் கே.என். நேரு, அர. சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் நாகை மாலி (சிபிஎம்), டி. ராமச்சந்திரன் (சிபிஐ), சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது (மமக), எஸ்.எஸ். பாலாஜி (விசிக), சின்னப்பா (மதிமுக), எம்.ஆர். காந்தி (பாஜக), ஒய். பிரகாஷ் (திமுக) ஆகியோர் பேசினர்.