tamilnadu

img

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கத்திரி வெயில் நிறைவடைந்து 3 வாரங்களுக்கு மேலாகியும் கடும் வெயில் சுட்டெரித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக, கோடை காலத்தை காட்டிலும் கடுமையான வெயில் இருந்தது. 
தலைநகர் சென்னை உட்பட பல வட தமிழக மாவட்டங்களில், இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வெப்பம் கூடுதலாக வெயில் இருந்தது. சுமார் 190 நாட்களுக்கு மேல் மழை பெய்யாததால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தினாலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யத் துவங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் 
பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 
இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு , தெற்கு வங்க கடல், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளது.