tamilnadu

img

அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துக... போக்குவரத்து ஓய்வூதியர்கள் முதலமைச்சருக்கு கடிதம்...

சென்னை:
உயர்த்தப்பட்டு வழங்கப்படாத 67 மாத அகவிலைப்படியை வழங்குவதோடு, மருத்துவக் காப்பீடு திட்டத்தைசெயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஓய்வூதியம் 9 ஆம் தேதிக்கு பதிலாக 5 ஆம் தேதியே வழங்கப்படும், மருத்துவக் காப்பீடு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும், அகவிலைப்படி கோரிக்கை 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என்று ஒப்புக் கொண்டனர்.

இதன்படி, 5 ஆம் தேதி ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்படுகிறது. இருப்பினும், பேச்சுவார்த்தை முடிந்து 20 மாதங்களாகியும் அகவிலைப்படி உயர்வு,  மருத்துவக்காப்பீடு திட்டம் அமல்படுத்தவில்லை.2016 ஜனவரி முதல் ஒவ்வொரு அரையாண்டிலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 67 மாதங்களாக வழங்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசின் ஒப்புதலை பெற்று அகவிலைப்படி உயர்வுவழங்குவதாக ஒப்புக் கொண்டனர்.

அரசு துறைகள், மின்வாரியம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. எனவே, இவ்விரு பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;