tamilnadu

img

பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள் : ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் நடந்து வரும் வருமானவரி சோதனைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

பிபிசி செய்தி நிறுவனத்தின் தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று 14-02-2023 செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று 15-02-2023 இரு நாட்களாக வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

பிபிசி செய்தி நிறுவனம் தனியார் ஊடக நிறுவனம் அல்ல மாறாக 1927ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பொது நிதியில் துவக்கப்பட்டு உலக அளவில் மதிப்பு பெற்ற ஊடக நிறுவனம். இந்த நிலையில் பிபிசி நிறுவனத்தின் தில்லி மும்பை அலுவலகங்களில் நடந்து வரும் வருமானவரி சோதனைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்துள்ளது.

அரசு மேற்கொள்ளும் வருமான வரி சோதனைகளில் தலையிடவில்லை. ஆனால் வருமான வரி தொடர்பான கேள்விகளுக்கு அல்லது சந்தேகங்களுக்கு நிர்வாகப் பணியாளர்களுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம். அதையும் மீறி திடீர் சோதனையின் நோக்கம் வரி ஏய்ப்பை நோக்கியதாக இருந்தால் பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் கணினிகள் மற்றும் செல்போன்களை குறி வைத்து அதிகம் உற்றுநோக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வருமான வரித்துறையின் இந்த சோதனை நடவடிக்கைகள் பிபிசியின் செய்திச் சேவையை கடுமையாக பாதித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் செயலாகவே இந்த வருமான வரி சோதனைகளைப் பார்க்கவேண்டியுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரத்தை கருத்துரிமையை மிரட்டும் செயலாகவே பிபிசி நிறுவனத்தின் மீதான வருமான வரி சோதனைகள் அமைந்துள்ளது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான இந்த போக்கை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது. இந்த சோதனைகள் குறித்து முழு அறிக்கையை வெளியிடவும் மத்திய அரசை வலியுறுத்துகின்றது.