tamilnadu

img

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முழுமையாக வேலை-கூலி வழங்குக!

சென்னை, ஆக.9 -
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முழுமையாக வேலை - கூலி வழங்க வேண்டும்; இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 அன்று தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர், இயக்குநர், கூடுதல் இயக்குநர் (MGNIEGA) ஆகியோரை, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் அ. பழநிசாமி, மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்திய தலைவர்கள், இதுதொடர்பாக மனு ஒன்றையும் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

வேளாண் துறையில் நவீன எந்திரப் பயன்பாடு அதிகரிப்பு- கடந்த ஆண்டு பருவமழை குறைவு ஆகிய காரணங்களால், விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாய வேலைகள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பும் வருமானமும் மிகவும் குறைந்துள்ள நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டமே கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைகளுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் திட்டமாக உள்ளது.

ஆனால், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வேலை தன்மைகள் தீர்மானிப்பது ஆகிய காரணங்களால், இந்த திட்டத்திலும் வேலை அளிப்பது குறைந்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் மற்ற பிற மாநிலங்களவை விட தீர்மானித்த இலக்கினை இரட்டிப்பாக்கி 40 கோடி மனித சக்தி வேலை நாட்கள் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். ஆனால் நடப்பு 2024-25ஆம் நிதியாண்டு தொடங்கி நான்கு மாதங்களைக் கடந்தும் இதுவரை பெரும்பகுதியான ஊராட்சிகளில் சரி வர வேலை வழங்கவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கணிசமான ஊராட்சிகளில் இதுவரை ஒருநாள் கூட வேலை துவங்காத ஊராட்சிகளும் இருக்கிறது. கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள வேலை - வருமான இழப்பைக் கவனத்தில் கொண்டு, ஊரக வேலையுறுதித் (MGNREGA) திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

குறிப்பாக, அட்டைப் பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாக வேலை வழங்கிட வேண்டும்; அறிவிக்கப்பட்டுள்ள தினக்கூலி ரூ.319/ஐ குறைக்காமல் முழுமையாக வழங்கிட வேண்டும்; குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்; அனைத்து வேலை அட்டைதாரர்களுக்கும் முழுமையாக வேலை கிடைக்கும் வகையில் பணிகளை தேர்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்திட வேண்டும்;  கட்டுமானப் பணிகளை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.