அம்பத்தூர், ஆக.5- புழல் பகுதியில் இருந்து சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், தொழிற்பேட்டை, நொளம்பூர், வானகரம், மதுரவாயல், போரூர் குன்றத்தூர், அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை வழியாக தாம்பரம் வரை பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி கோயம்பேடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், முகப்பேர், அம்பத்தூர், தொழிற்பேட்டை, புழல், மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிக ளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த பைபாஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைபாஸ் சாலையில் உள்ளூர்வாசிகள் பயன்பாட்டிற்காக ஆங்காங்கே சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இச்சாலையின் வானகரம் சர்வீஸ் சாலையில் கடந்த சில மாதங்களாக குப்பை கொட்டப்படுவதால், மலை போல் குவிந்து கிடக்கிறது. வானகரம் ஊராட்சி பகுதிகளில் இருந்து தினசரி குப்பை கழிவுகளை சேகரிக்கும் துப்புரவு ஊழியர்கள் வாகனங்களில் கொண்டு வந்து, சர்வீஸ் சாலையில் கொட்டி வருகின்றனர். தற்போது பெய்து வரும் சிறு மழையால் குப்பை யுடன் தண்ணீர் சேர்ந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வானகரம் சர்வீஸ் சாலை யில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை அடிக்கடி வேகமாக வீசும் காற்றால் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அப்போது, அந்த வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் முகத்தின் மீது குப்பை விழுகின்றன. இதனால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தூர்நாற்றம் வீசும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு தேங்கியுள்ள குப்பையில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி சுற்றியுள்ள குடியி ருப்புக்கு படையெடுப்பதால், மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புழல் - தாம்பரம் புறவழிச்சாலை, வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கவும், அதனை உடனடி யாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.