tamilnadu

img

கொரோனா நோயாளிகளின் தரமான சிகிச்சைக்கு பொது சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துக...

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவிட் 19 நோயாளிகள் அனைவருக்கும் தரமான சிகிச்சையை இலவசமாக அளிப்பதற்காக அரசு பொது சுகாதாரக்கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்று இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரும்பகுதி மக்கள், கோவிட் 19 சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை களையே நம்பியிருக்கும் சூழலில்  அவர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும்அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள கோவிட் 19 சிகிச்சை மையங்களில் அனுமதிக்க மறுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். தீவிர  நோய்பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்ப தற்கான வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும். 

அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், அனுமதி மறுக்கபட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதற்கு ஏதுவாக தனியார் மருத்துவமனை களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் படுக்கைகளை அரசு கையகப்படுத்த வேண்டும். கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவு கொள்முதல் செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் மற்றும் காப்பீடு போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 

 தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை உடனடியாக, நிரந்தரமாகப் பணியமர்த்திட வேண்டும்.கொரோனா பரிசோதனை கருவிகளை தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். “PPE” என்ற முழுஉடற்பாதுகாப்பு உடைகள்,  முகக்கவசங் கள், கிருமிநாசினிகள், கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தபடும் மருந்துகள் முதலியவற்றிற்கு ஜி.எஸ்.டிவரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

;