சென்னை:
வில்லிவாக்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரது ஆக்கிரமிப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் இடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலையிட்டு மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் எம்.டி.எச்.சாலையில் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியானது பன்னிரெண் டரை கிரவுண்ட் பரப்பளவு கொண்டது. இதில், 8 கிரவுண்ட் நிலத்தை, சிங்காரம் பிள்ளை பள்ளி அறக்கட்டளை நிர்வாகம் சட்ட விரோதமாக தனியாருக்கு விற்றுள்ளது.அந்த இடத்தில் உணவகம், காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. ஒருசில கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
முற்றுகைப் போர்
சட்டவிரோத இட விற்பனையை எதிர்த்தும், பள்ளி இடத்தை மீட்கக் கோரியும் அக்.11-13 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்.15 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை என போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில், அந்த பள்ளி மற்றும் விற்பனை செய்யப்பட்ட இடங்களில் உள்ள கட்டிடங்களை திங்களன்று (அக்.19) கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதன்பின்னர் டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முனைவர் எஸ்.சுகன்யாவை சந்தித்து ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.அதன்பிறகு, செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:வில்லிவாக்கம் பிரதான சாலையில் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள ஏழை எளிய நடுத்தரமக்களின் பிள்ளைகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரஅவசரமாக தற்போதை பள்ளி நிர்வாகம் 8 கிரவுண்ட் நிலத்தை தனியாருக்கு விற்றுள்ளது. அந்த இடத்தில் வணிக வளாகம், ஒட்டல், காய்கறிகடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்
அறக்கட்டளை அமைத்து கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தை, விற்பது சட்டவிரோதமானது. 1948 ஆம் ஆண்டு தனியார் பள்ளி பராமரிப்பு சட்டத்தின்படி, கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்க முடியாது.அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டுமெனில், அரசிடம் அனுமதி பெற வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், பள்ளி இடத்தை வணிக பயன்பாட்டிற்கு விற்றிருப்பது சட்டவிரோதம். உடனடியாக அந்த விற்பனையை அரசு ரத்து செய்ய வேண்டும்.மாநகராட்சி எல்லைக்குள் சிஎம்டிஏ, மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம்கட்ட இயலாது. பள்ளி இடத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்ட எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள்? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாக்க வில்லை எனில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்காலத்தில் கற்க முடியாத நிலை உருவாகும்.எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாக தலையிட்டு, பள்ளி இடத்தை மீட்க வேண்டும். விற்பனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஒருபகுதி நிதியை தருகிறது. நிதி தேவையெனில் அரசிடம் கோர வேண்டுமே தவிர, விற்பனை செய்வதை ஏற்க முடியாது.தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுரிகள் முறையாக நடைபெறவும், கல்வி வளாக இடங்களை விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.