tamilnadu

மெரினாவில் நேரக் கட்டுப்பாடு விதிக்காவிடில் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

சென்னை, ஜூன் 7-  சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.  

அதில், கோடை வெப்பம் தணிக்க வருவோர் மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று (ஜூன் 7) விசாரணைக்கு வந்தது.

அப்போது இரவில் நேரக் கட்டுப்பாடு இன்றி பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் சட்டம் 41இன்படி பொது இடங்களில் கூட நேரக் கட்டுப்பாடு விதிக்க அதிகாரம் உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ் தெரிவித்தார்.  

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோடை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு உத்தரவிட்டனர்.