tamilnadu

மனிதசங்கிலி இயக்கத்தை வெற்றியடைச் செய்வீர்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு

சென்னை, ஜூன் 8-தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன்  தலைமையில் ஜூன் 7அன்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட பெட்ரோலிய ரசாயனப் பொருட்களை எடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதுடன் காவிரி படுகை பாலைவனமாகிவிடும் நிலைமை ஏற்படும். இதற்கெதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் மத்திய - மாநில அரசுகள் மக்கள் எதிர்ப்பை உதாசீனப்படுத்தி அடக்குமுறை மூலம் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றன. அரசின் இத்தகைய நடவடிக்கையைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக் கையை வலியுறுத்தி ஜூன் 12ந் தேதி விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட் டம் நடத்திட பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த மனிதச் சங்கிலி இயக்கத்திற்குத் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதுடன், மனிதச் சங்கிலி இயக்கத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்காச்சோளப் பயிருக்கு  இழப்பீடு
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழு தாக்கி பல லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகினர். இந்த பெரும் பாதிப்பு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியில் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு அளித்தனர். இத்தனைத் தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் மக்காச்சோள பாதிப் பிற்கு நஞ்சைக்கு ஹெக்டேர் ஒன் றுக்கு ரூ.10500ம், மானாவாரிக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7410ம் வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இன்றுவரை அந்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அரசாணை கூட வெளியிடப்படவில்லை. இது விவசாயிகளை மிகப்பெரும் ஏமாற் றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.