சென்னை, நவ.4- தீபாவளி பண்டிகைக்காக 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்ததால் பலரும் தங்களது சொந்த ஊரிலிருந்து மீண்டும் சென்னை திரும்பினார். இதனால் பரனூர் சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம், தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்டிகையை கொண்டாடிய பிறகு மீண்டும் சென்னை நோக்கி சனிக்கிழமை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் மூலம் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதனால் ஞாயிறன்று மாலை முதல் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அதிகப்படியான வாகனங்கள் வருகையால் போலீஸார் சிரமமடைந்தனர். இதேபோல் பாலாறு மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் காட்டாங்கொளத்தூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.