tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

எம்.சரஸ்வதி எம்சி மகள்  அகால மரணம் 

சென்னை, ஏப். 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், 123வது வார்டு கவுன்சிலருமான எம்.சரஸ்வதியின் மகள் தமிழ்மொழி செவ்வாயன்று (ஏப்.15) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 29. விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வனஜகுமாரி,  செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், ம.சித்ரகலா, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் ப.ஜெயவேல், விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாதர் சங்க மாநில பொருளாளர் வ.பிரமிளா, மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் புதனன்று (ஏப்.16) முண்டியம்பாக்கம் முக்தி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பொன்னேரியில் இடியுடன்  கனமழை மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர், ஏப்.16- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதனன்று (ஏப் 16), இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னேரி பேருந்து நிலையம் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பலத்த மழையால்  போக்குவரத்து நெரிசல் காரணமாக பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து பழவேற்காடு தச்சூர் கூட்டு சாலைக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இதனை கண்ட பொன்னேரி போக்குவரத்து காவலர் ஒருவர் மழை என்றும் பாராமல் மழையில் நனைந்தபடி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். கனமழை பெய்து கொண்டிருந்த போதும் கடமை தவறாத காவலர் விசிலை ஊதிக்கொண்டு வாகனங்களை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார்.  பின்னர் வாகனங்களை வேறு வழியில் அனுப்பும் முயற்சி ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை பிரமிப்புடன் பார்த்தபடி இருந்தனர்.  மனிதநேயமிக்க ஒருவர் ஒரு குடையை  எடுத்து சென்று மழையில் நனைந்த காவலருக்கு கொடுத்து உதவி ஒரு வாகனத்தை சீர் செய்யும்  பணியில் ஈடுபட்டார்.