tamilnadu

img

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரைன் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரைன் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில்  நடைபெற்று வருகிறது. நேற்று படப்பிடிப்பு தளத்தில் ராட்சச கிரேன் எதிர்பாராதவிதமாக விழுந்து சரிந்தது. இதனால், இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் உதவியாளர் சந்திரன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
காவல் துறையினர் விசாரணையில் நேற்று நடந்த விபத்தின் போது, கிரேனை இயக்கியவர் அனுபவம் இல்லாத, புதியவர் என்று தெரிய வந்துள்ளது.  அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன், சமநிலை தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.