அரசியல் சாசனத்திற்கு புறம்பாக மத நிகழ்வுகளில் அரசு ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழி கோலிவிட்டது. எனினும் அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதம் குற்றச் செயல் என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் அங்கு 2020 ஆகஸ்ட் 5 அன்று கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் உத்தரபிரதேச அரசிலும் மத்திய அரசிலும் தலைமைப்பொறுப்பில் உள்ள பிரதமர் உள்ளிட்ட பலரும் பங்கெடுக்க இருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. தனிப்பட்ட ஓர் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்நிகழ்வில் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள இவர்கள் பங்கெடுப்பதானது அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு புறம்பானதாகி விடும் என கருதுகிறது தமுஎகச. மத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை குடி மக்களுக்கு வழங்கும் நமது அரசியல் சாசனம் அரசானது, எந்தவொரு மதத்தையும் சாராமல் இருக்க வேண்டும் எனப் பணிக்கிறது. இவ்வாறு மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் சாசனத்தின் பெயரால் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள பிரதமர் உள்ளிட்ட எவரொருவரும் தனிப்பட்ட ஓர் அமைப்பின் மதச்சார்ப்பு நடவடிக்கையான ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கெடுக்க வேண்டாமென தமுஎகச கேட்டுகொள்கிறது.