சென்னை, ஜூன் 26- சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும், போதுமான நிதி இல்லாத காரணத்தினால் பணிகள் முடங்கியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வழித்தடத்தில் 179 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆரம்ப கட்ட சர்வே பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த ரயில் பாதை அமைந்தால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனக் கூறப்பட்டது.
இந்த புதிய ரயில் பாதை கடலோரம் வழியாக அமைய உள்ளதால் பயணி களுக்கான புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும் என்றும், பயணமும் எளிதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால் திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்றிய பட்ஜெட்டிலும், ரூ.50 கோடி மட்டுமே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு முக்கியமான ரயில் பாதை திட்டமாக உள்ள நிலையில், அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் நடைபெறாமல் உள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மற்றும் கடலூரை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி கள் கூறுகையில், சென்னை - மாமல்ல புரம் - புதுச்சேரி - கடலூர் ரயில் திட்டத்தை செயல்படுத்த அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியில் பணிகளை நடத்தி வருகிறோம். வரும் பட்ஜெட்டில், இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு அரசுகளும் இணைந்து தங்களின் பங்களிப்பை அளிக்க முன்வந்தால், திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியும் எனக் கூறினார்.