tamilnadu

பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை,டிச.17- கடந்த அதிமுக ஆட்சியின்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக கே.சி. வீரமணி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.  

இந்த தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில், பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்களை தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராக குற்றம்சாட்டி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி  கே.சி. வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனு,பிரமாண பத்திரம் மற்றும் வருமான வரி கணக்குகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் கே.சி. வீரமணி, தனது பிரமாண பத்திரத்தில் ஏராளமான  சொத்துக்கள், பணப் பரிவர்த்தனைகளை மறைத்திருப்பது தெரியவந்தது. அதோடு வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யப்பட்டதில் குறிப்பிட்டிருந்த வருமானமும், தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானமும் தொடர்பில்லாமல் முரண்பாடாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் -1இல் கே.சி. வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (டிச.17)  விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி. வீரமணி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இருப்பினும் எதிர் மனுதாரரான ராமமூர்த்தி ஆஜராகாததால் இந்த  வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். மேலும் ஜனவரி 6ஆம் தேதி கே.சி. வீரமணி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கே.சி.வீரமணி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ என்ற பிரிவின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.