tamilnadu

img

கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கான அரசாணை 318-ஐ செயல்படுத்த நடவடிக்கை எடுத்திடுக.... தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை:
கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை 318-ஐ செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல தலைமுறைகளாக இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். பல இடங்களில் அடிமனை வாடகைதாரர்களாகவும், தனது சொந்த பணத்தில் வீடுகள் கட்டியும் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசு 30.8.2019 அன்று அரசாணை 318-ஐ வெளியிட்டது. அதில் நீண்ட காலமாக கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. 

இந்த அரசாணையை செயல்படுத்தக் கூடாது என இந்து அமைப்புகள், எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். சேலம் பாஜக கட்சியை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். அரசாணை 318-க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமிழக அரசும், 10-க்கும் மேற்பட்ட பயனாளிகளும் தனித்தனியாக வழக்கு தொடுத்துள்ள நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கோவில் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட அந்த வழக்கிற்கான உத்தரவைப் பிறப்பிக்காமல் ஒட்டுமொத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் குறித்தும், கோவில் இடங்கள் கோவில் பயன்பாட்டிற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கோவில் இடத்தில் நீண்ட நாள் குத்தகைதாரர்கள், குடியிருப்பவர்கள் குறித்தும் ஒரு நீண்ட உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் அரசாணை 318 தொடர்பான வழக்கு தற்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு பல்வேறு அச்சங்களை கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.மேலும்  அரசாணை 318 குறித்த வழக்கின் தீர்ப்பும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துமோ என்ற இயல்பான கேள்வியும், அச்சமும் ஏற்பட்டுஉள்ளது. 

அரசு கொள்கை முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலை பெற்று வெளியிட்ட அரசாணை 318 -ஐ தமிழக அரசு செயல்படுத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில் இடங்களில் குடியிருப்பவர்களில் 99 சதவீதம் பேர் சாதாரண ஏழை, எளிய மக்கள் அனைவரும் இந்துக்கள்தான், இறை நம்பிக்கையுடையவர்கள் தான் என்பதை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  ஏழைகளுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை 318-க்கான தடை உத்தரவுகளை  ரத்து செய்து, ஏழை மக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.