சென்னை, ஆக.3- தமிழ்நாட்டில் முதல் முறையாக பாக்ஸ் புஷ்சிங் முறையில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி பெருங்களத்தூர் அடுத்தஇரும்புலியுரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரிலிருந்து தென் மாவட்டங் களுக்கு செல்வதற்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும், பிரதான சாலையாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலை இருந்து வருகிறது.
தாம்பரம் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக இருந்தாலும், தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியில் உள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கான பாலம் இரு வழிப் பாதையாக உள்ளது. இரு வழி பாதையாக இருப்பதால் காலை மற்றும் மாலை வேலை களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இது மட்டும் இல்லாமல் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சென்னை நோக்கி வரும் வாகனங்கள் இரும்புலியூரில் தேங்கி நின்று பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்திருந்தனர்.
இதுபோக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழி யாக வரும் கனரக வாகனங்கள் பெருங் களத்தூர் அடுத்த இரும்புலியூர் ரயில்வே பாலத்தை கடந்து தாம்பரம் வரவேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாகவும் கடும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சனையானது சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதால் , இதற்கு தீர்வு காணும் பொருட்டு ரயில்வே பாலத்தையும் சாலையும் அகலப்படுத்த திட்டமிடப்பட்டு, சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்தாண்டு துவங்கியது.
முதற்கட்டமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு பகுதியில் ரயில்வே பாலம் அகலப்படுத்தப்பட்டது . இதனைத் தொடர்ந்து கிழக்கு - மேற்கு பகுதிகள் அகலப் படுத்தும் பணி துவங்கியது. சுமார் 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு பகுதியில் பழைய ஜிஎஸ்டி, சாலை வழியாக வரும் வாகனங்களும், வேல் நகர் வழியாக வரும் வாகனங்களும் இரும்புலியூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கின்றன. வண்டலூர் நோக்கி நெடுங்குன்றம், வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் யூடர்ன் எடுக்கின்றனர். இதன் காரணமாகவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் காலை, மாலை வேலைகளில் உள்ளூர் மக்கள் கடும் பாதிப்படைகின்றனர்.
ரெடிமேட் சுரங்கப்பாதை
எனவே இந்த திட்டத்தின் மற்றொரு பகுதியாக இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், வாகனங்கள் U டர்ன் எடுத்து செல்ல வசதி ஏற்படும் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் பெருமளவு தவிர்க்கப்படும். ரெடிமேட் ஆக செய்யப்பட்ட கான்கிரீட் பெட்டிகளில் வைத்து இந்த பணி நடைபெற்று வருகிறது.
பல்வேறு திட்டங்களில் இது போன்ற ரெடிமேட் கான்கிரீட் வைத்து, பாக்ஸ் புஷ்சிங் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இரும்புலியூரில் இருவழி சுரங்கப் பாதையில் சுமார் 195 அடி நீளத்திற்கு ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக இவ்வளவு தூரத்திற்கு பாக்ஸ் புஷ்சிங் முறையில் அழுத்தி பொருத்தப்பட உள்ளது.
இப்பணி முடிக்கப்பட்டால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி வரும் வாகனங்கள் சுரங்கப்பாதை வழியாக எளிதாக U திருப்பம் எடுத்து வேல் நகர், நெடுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். அதேபோன்று வேல்நகர், தேவநேச நகர், பழைய ஜிஎஸ்டி சாலை வழியாக வரும் வாகனங்கள் சுரங்கப் பாதை யில் சென்று வலது புறம் திரும்பி தாம்பரத் திற்கு செல்லலாம். இப்பணி அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.