சென்னை, ஜூன் 22- காவல்துறை அடக்கு முறைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.கார்த்திக் , மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அதி கரித்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மீது உறுதியான நடவடிக்கைக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமையன்று (ஜூன் 22) போராடிய வாலிபர் சங்க தோழர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கி கைது செய்த காவல்துறையை கண்டிப்பதாக கூறி யுள்ளனர்.
மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதியில் அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மீறி நடத்தி னால் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினர் . கைதாகிறோம் என்று சொன்ன பின்பும், ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் நிற்கக்கூட விடாமல் அடா வடித்தனமாக தாக்கி வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்பொழுது சங்கத்தின் இணைச் செயலாளரும், 98வது வட்ட மாமன்ற உறுப்பினருமான பிரியதர்ஷினி காவல்துறையிடம் பேச முற்பட்டபோது வாயை மூடிட்டு போங்க என்று மிக மோசமான முறையில் திருநாவுக்கரசு என்ற அதிகாரி அதட்டினார்.
அதுமட்டுமல்லாது, அங்கிருந்த ஆண் காவலர்கள் தலை முடியைப்பிடித்து இழுத்துள்ளனர். மாவட்டக் குழு உறுப்பினர் நிகில் தேவை கீழே தள்ளிவிட்டதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டப் பொருளாளர் பார்த்திபன் மற்றும் சத்யா ஆகியோர் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பல தோழர்களை நெஞ்சில் அடித்து வலியால் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் இருந்தனர். மாவட்டச் செயலாளர் மணி கண்டன் அவர்களை நெஞ்சில் அடித்து ஒழுங்கு மரியாதையா மேல ஏறு என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் காலை பிடித்து இழுத்து காவல்துறை பேருந்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர்.
காவல்துறையின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இந்த அக்கறையை கள்ளச்சாராய விவகாரத்தில் காட்டியிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் வாலிபர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேபோல விழுப்புரம் , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. தமிழக அரசின் காவல்துறை, ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கள் தெரி வித்துள்ளனர்.