சென்னை, ஜூன் 10- சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வருவாயை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மெரினா , பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை அமைத்துள்ளது.
இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம் வசூல் செய்ய ஒப்பந்த அடிப்படையில் டூர் மீடியா சர்வீஸ் மற்றும் எஸ்எஸ் டெக் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இந்த வாகன நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வாகன நிறுத்த செயல் பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் செயல்படும் பகுதிகளில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இதில் வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்ட ணம் வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிம ஆய்வாளர் ஆகி யோர் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது, மெரினா பெசன்ட் நகர் கடற்கரை, தி. நகர் பகுதிகளில் யாரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உத்தரவிட்டு, பொதுமக்கள் தற்போது கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அரசு சார்பு நிறுவனமான தமிழ் நாடு முன்னாள் படைவீரர் கழகம் மூலம் கட்டண வசூல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே மொத்த வருவாயில் மாநகராட்சிக்கு 55 விழுக்காடு, ஒப்பந்த நிறுவனத்திற்கு 45 விழுக்காடு வீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப் படுகிறது. இது தொடர்பாக முன்னாள் படை வீரர்கள் கழகத்துடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.