tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்

திருவள்ளூர், ஜூன் 24 -  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளைம் பஜாரில் ஞாயிறன்று (ஜூன் 23) பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் ஆதவன் தீட்சண்யா  பேசியதாவது:- 1975 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பதவி பறி போனது. தேர்தலில் நிற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், தனக்கு ஏற்பட்ட நெறுக்கடியை நாட்டிற்கு ஏற்பட்டதாகக் காரணம் காட்டி,  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலை என்றால் எந்த சுதந்திரமும் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிற்சங்கத் தலை வர்கள், மாணவர்கள் என பலரை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் தான் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கி இருக்கின்ற கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை உயர்த்தி பிடிக்க  கதை, கவிதை, இசை, பாடல், ஓவியம், நாடகம் என நடத்த முன்வந்தனர்.

ஆனால் அவர்களுக்கும்  உரிமைகள் மறுக்கப்பட்டது.  எந்த உரிமையும் இல்லாத காலத்தில் மனிதனுக்கு மூச்சு விடுவ தற்கு ஒப்பானது கருத்து சுதந்திரம். பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடுவது, சங்கம் சேரும் உரிமை என்று பல்வேறு உரிமைகளை முன்வைத்து உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். இப்போது மத்திய பாஜக அரசு  அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை ஆபத்தானது. இதை மக்களிடம் கொண்டு சென்று அபாயத்தை விளக்க வேண்டும். 3 வயதில் குழந்தைகளை படிப்பதற்கு தாயார் செய்ய வேண்டும், 3 ஆம் வகுப்பில் ஒரு தேசிய நுழைவுத் தேர்வு. இப்படி 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். 8 ஆம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர துடிக்கிறது பாஜக அரசு. இதை எதிர்த்து  அனைவரும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பாரி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் நீலா, மாவட்டச் செயலாளர் வி.அந்தோணி, பொருளாளர் சி.சுரேஷ் உட்பட பலர் பேசினர். கவிஞர்கள் ச.சுரேஷ், கி.எழில் ஆகியோர் கவிதைகளை வாசித்தனர். அந்திக்காற்று பாலு,தேசன், பாடல்கள் இடம்பெற்றன.