tamilnadu

img

ஆழ்ந்த உறக்கத்தில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ரகுபதி சாடல்

சென்னை, டிச. 19 - அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

“அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித் ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரு கிறது. சட்டமேதை, சமத்துவப் போராளி, அண்ணல் அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார். ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டு வரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும்  கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்தில் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித் ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனமில்லாமல் அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

யார் கண்ணிலும் படாமல் பதுங்குக் குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள், அண்ணல் அம்பேத்கர்  யார் என்றாவது அவருக்கு தெரியுமா, என்று!” என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.