tamilnadu

img

தீக்கதிர் தலையங்கம் எதிரொலி: சென்னையில் 2,100 பேருந்துக்களில்   அவசர ஒலி அழைப்பு

சென்னையில் முதற்கட்டமாக 2,100 பேருந்துகளில் பேனிக் பட்டன் எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நிர்பயா நிதியின் கீழ் இத்தகைய பணிகளைக் கடந்த கால அதிமுக அரசு செய்யவில்லை என்றும் நகர்ப்புறங்களில் பேருந்துகளிலும், வாடகை கார்களிலும் அவசரக் கால பொத்தானைப் பொருத்தவேண்டும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீக்கதிரில் கடந்த திங்கட்கிழமை(டிச. 13) வெளியான  தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்  சென்னையில் செவ்வாயன்று (டிச. 14) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: 
பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாகப் புகார்களைத் தெரிவிக்க இலவச அழைப்பு எண் அனைத்து பேருந்துகளிலும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  நிர்பயா நிதி திட்டத்தின் கீழ்  மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் பெண்கள் அவசர நேரங்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ள  அபாய ஒலி எழுப்பும் பொத்தான் பொருத்தப்படும். 
பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் எனப் பல தரப்பினரும் பேருந்தில் பயணம் செய்வார்கள் ஆனால் ஒரு சில நடத்துநர்கள் அவர்களை இறக்கி விடுகின்றனர். எனவே இது தொடர்பாக நடத்துநர் ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி போன்று பொங்கலுக்குச் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.