சாம்சங் நிற்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்களையும், தொழிலாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருபெரும்புதூரில் செயல்படும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 விழுக்காட்டினர் செப்.9ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் பேசும் உரிமை மற்றும் பெரும்பான்மை சங்கத்துடன் நிர்வாகம் பேச வேண்டும், இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இதனையொட்டி செப்.16 அன்று காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு கொடுக்க தொழிலாளர்கள் ஊர்வலமாக செல்ல இருந்த நிலையில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். ஊர்வலத்திற்கு வந்த தொழிலாளர்களையும் ஆங்காங்கே கைது செய்தனர். தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிந்து அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் கைது செய்ததை கண்டித்தும், மாநில அரசு தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி புதனன்று (செப்.18) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (தொமுச, எச்எம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 12 சங்கங்கள்) அழைப்பு விடுத்திருந்தது.
இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தொழிலாளர்களை வளைத்து வளைத்து கைது செய்தனர். போராட்டத்திற்கு வந்த சிஐயுடி மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப்பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், நிர்வாகிகள் ஏ.கிருஷ்ண மூர்த்தி, கே.திருச்செல்வன், கே.சி.கோபிகுமார், சி.திருவேட்டை, மணிமேகலை, ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏஐயுடியுசி தலைவர் சிவக்குமார், எல்டியுசி தலைவர் முனுசாமி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.