tamilnadu

img

துணை மின் நிலையம் கோரி வெங்கல் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப். 20- துணை மின்நிலையம் அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (செப்.20) வெங்கல் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபாளையம் அருகில் உள்ளது வெங்கல். இதைச் சுற்றியுள்ள மாம்பாக்கம், காவனூர், புன்னப்பாக்கம், பாகல்மேடு,  செம்பேடு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.இதனால் விவசாய விளை நிலங்களுக்கு நீர் பாசனம் முறையாக செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே விவசாயி தான் விளைவித்த பொருட்களுக்கு போதுமான விலையில்லாமல் நொடிந்து போய் உள்ளனர்.இந்த சூழலில்  அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மேலும் பாதிக்கின்றனர். இந்த நிலையில் வெங்கல் கிராமம் அதைச் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தடையற்ற மின்சாரம் கிடைத்திட புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல முறை போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பிறகு புதிய துணை மின் நிலையம் அமைக்க உதயமின் திட்டத்தின் மூலம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, இதனைக் காலம் கடத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பாசன கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்க வேண்டும், மதகுகள், கல்வெட்டுகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனைப் புதுப்பிக்கப்பட்ட வேண்டும், வெங்கல், காவனூர், பூரிவாக்கம் வழியாக இயங்கிய வந்த மாநகர பேருந்துகள் தடம் எண் 580, 580பி, 505பி, விழுப்புரம் கோட்ட பேருந்துகள் 160பி, 171, 173, 179-ஆகியவை மீண்டும் இயங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் வெங்கல் கிளை செயலாளர் எம்.ரவி தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்கு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன்,வேட்டைக்காரன் முன்னேற்ற மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கங்காதுரை உள்ளிட்டோர் பேசினர். கரன்டு சுப்பிரமணி நன்றி கூறினார்.