சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து சிலிண்டர்களை தரையில் கிடத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியதை உடனே திரும்ப பெற வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை கொண்டு, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மேலும் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. பாகூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் புதுச்சேரி பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர். மாநில குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி, கமிட்டி உறுப்பினர்கள் பக்தவச்சலம், வடிவேலு, ஹரிதாஸ், சேகர், கவுசிகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக எரிவாயு சிலிண்டர்கள், அடுப்புகளை கழிவுகளை போல் கீழே வீசி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.