tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

சிறு வியாபாரிகளை பாதுகாக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூலை. 15- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் கடந்த 30, 40 ஆண்டுகளாக பலர் தரையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது திடீரென அந்த கடைகளை அகற்றிவிட்டு, ஒப்பந்த முறையில் புதிய கடைகளை அமைக்க நடவடிக்கை ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றுவதைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், கே.நாகராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 15 - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல். இவர் கழனியில் உழவு செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டரின் முன்பக்கம் விழுந்தார். இதில் உடல் நசுங்கி கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அங்கி ருந்தவர்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தக வலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் கோகுல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பண்ருட்டி அருகே லாரி  மோதி 3 பேர் பலி

கடலூர், ஜூலை 15- பண்ருட்டி அருகே மணல் ஏற்றி சென்ற லாரி மேதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை அடுத்த ஆனத்துார் ஊராட்சி பால்வாடி தெருவை சேர்ந்தவர் பூவன். இவரது மகன் பாரதி (31).

இதே பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் கோகுல்கிருஷ்ணன் (24). நடுத்தெருவை சேர்ந் பழனிவேல் மகன் லோகேஷ் (24).

இதில் பாரதி, கோகுல் இருவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தனர். லோகேஷ் நெய்வேலி என்.எல்.சி-யில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று வந்தார். பாரதிக்கு திருமணமாகி மனைவி, இரு மகள்கள் உள்ளனர். கோகுல், லோகேஷ் இருவருக்கும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் பாரதி, கோகுல்கிருஷ்ணன், லோகேஷ் மூவரும் பண்ருட்டியில் இருந்து ஆனத்துார் கிராமத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். பண்ருட்டி - அரசூர் மெயின் ரோட்டில் புதுப்பேட்டை அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் அருகே வந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுபேட்டை காவல் துறையினர் 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் தீ விபத்து:  கணினிகள் எரிந்து நாசம்

விழுப்புரம், ஜூலை 15- விழுப்புரம் அருகே சிறுவந்தாடு மோட்சகுளம் கிராமத்தில்  தேசிய மயமாக்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்ளது. வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு விடுமுறை நாளாகும். இதனால் இரண்டு நாட்கள் கழித்து திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியின் பிரதான கதவை திறந்து உள்ளே பார்த்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதில் காசாளர் அறை, 6 கணினிகள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் எரிந்து சாம்பலானது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.