tamilnadu

img

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு சிபிஎம், தமுஎகச இரங்கல்

சென்னை:
திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில்  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் சனிக்கிழமையன்று சென்னையில் காலமானார்.  இவர் பிரபல திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் இளைய மகனாவார். பிரபல திரைப்பட எடிட்டர் பீ.லெனின், கண்ணனுக்கு மூத்த அண்ணன் ஆவார்.பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் நாவலான ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படத்தின் வழியாக ஒளிப்பதிவாளராக திரைப்பட உலகில் அறிமுகமானார் பீ.கண்ணன்.

பீ.கண்ணன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பீ.லெனினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர்.தமுஎகச மாநிலத் தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உட்படபலர் தொலைபேசி வழியாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தமுஎகச நிர்வாகிகள் இரா.தெ.முத்து, கி.அன்பரசன், கவிஞர் இளையபாரதி உட்பட திரைப்படக்கலைஞர்கள்  சென்னை பெசன்ட்நகர் மயானத்தில்  கண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

;